பரம்பரைப் பரம்பரையாக நம் முன்னோர்கள் அவர்களுக்கு தெரிந்த விஷயங்களையும், அவர்களுடைய அறிவையும், தனித்தன்மை வாய்ந்த திறமைகளையும் தங்கள் வாரிசுகளுக்கு கற்றுக்கொடுத்து, பாரம்பரிய அறிவைக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். இந்த விலைமதிப்பற்ற சொத்தை நாம் காப்பாற்ற வேண்டும். காப்பாற்ற வேண்டிய கடமையும் இருக்கிறது.
1992-க்கு பின், தாராளமயக் கொள்கையை (liberalization policy) இந்தியா பின்பற்றி வருவதால் சர்வதேச நிறுவனங்கள் நம் நாட்டில் மிகப் பெரிய அளவில் வணிகம் செய்கின்றனர். நம் நாட்டுக்கு தேவையான வருமானம் இவ்வாறு வணிகம் செய்யும் நிறுவனங்களால் கிடைக்கிறது. வணிகம் செய்வது புலப்படு பொருட்களிலும், சேவைத்துறைகளிலும் மட்டுமின்றி, அறிவுசார் சொத்துக்களிலும் நடந்துகொண்டிருக்கிறது. இதில் சர்வதேச நிறுவனங்கள் முன்னெச்சரிக்கையாக தங்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விஞ்ஞான அறிவையும், தொழில்நுட்பங்களையும் தனிக் காப்புரிமை (patent) செய்து காப்பாற்றுகின்றனர். இவ்வாறு காக்கப்படும் அறிவுசார் சொத்துக்களை உரிமையில்லா நபர்கள் பயன்படுத்த சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. பயன்படுத்த வேண்டிய உரிமையைப் பெற, அச்சொத்தின் உரிமையாளரிடம் விலைபேசி வாங்கவேண்டும். இந்த சூழ்நிலையில் நம் அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம் நாட்டில் விலைமதிப்பற்ற பாரம்பரிய அறிவுக்கு பஞ்சம் இல்லை. ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யோகம், மரபுவழி கலைகள், கர்நாடக சங்கீதம், பல நாட்டிய கலைகள் - இவைகளெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே.
விலைமதிப்பற்ற பாரம்பரிய அறிவுசார் சொத்துக்கள் மீது சில சர்வதெச நிறுவனங்கள் தனிக் காப்புரிமை பெற்று, அச்சொத்துக்களை பயன்படுத்தும் உரிமையை மற்ற நிருவனங்களுக்கு விற்று லாபம் காண முயல்கின்றனர். "பாஸ்மதி" அரிசி ஒரு உதாரணம். 1997-இல் ஒரு அமெரிக்க நிறுவனம் "பாஸ்மதி" அரிசியை தங்கள் பெயரில் தனிக்காப்புரிமை செய்துவிட்டனர். இந்திய அரசாங்கம் அமெரிக்காவுடன் தீவிர பேச்சுவார்த்தைகள் நடத்தியே "பாஸ்மதி" அரிசிக்கு அளிக்கப்பட்டுள்ள தனிக் காப்புரிமையை நீக்கச்செய்தனர். "பாஸ்மதி" அரிசி நம் நாட்டின் விலைமதிப்பற்ற வேளாண்மைச் சொத்து. பரம்பரை பரம்பரையாக நம் முன்னோர்கள் இந்த அரிசியை பயிர்செய்யும் அறிவை தங்கள் வாரிசுகளுக்கு ஒப்படைத்துவந்திறுக்கின்றனர். இந்த பாரம்பரிய அறிவை ஒரு சர்வதேச நிறுவனம் லாப நோக்கத்துடன் எப்படி சொந்தம்கொண்டாட முடியும்? இவைபோன்ற செயல்களை "உயிரியல் அறிவுசார் திருட்டு" (bio-piracy) என்றுதான் கூற முடியும். இந்திய அரசாங்கம் இவை போன்ற நிறுவனங்கள் மீது இந்திய மண்ணில் வணிகத்தடை செய்யவேண்டும். மேலும திருட்டால் லாபம் பெற்ற நிறுவனங்கள் மீது நஷ்டயீடு வழக்குகளைத் தொடங்கி மிகப் பெரிய தொகைகளை இழ்ப்பீடாக பெற வேண்டும். மேலும் அயல்நாடுகளுடன் ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவின் பாரம்பரிய அறிவுசார் சொத்துக்களை உலகின் எல்லா மூலைகளிலும் பாதுகாக்க வேண்டும். இது நம் ஜனநாயக அரசாங்கத்தின் கடமை. "பாஸ்மதி" அரிசியின் உதாரணம் வருங்கால தலைமுறைகளுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
No comments yet
Leave a comment »There are no comments for this article yet.