வெட்டியாகவும், வன்மமாகவும் பேசுவது சிலரின் சுபாவம். இந்த குணத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் வீணாக பேசி சட்டத்தின் வலைக்குள் சிக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக, ஒருவரைப் பற்றி தவறாகவும், அவர் நற்பெயரை கெடுக்கும் வகையிலும் மூன்றாம் நபர்கள் அறியும்படி பேசினாலோ, எழுதினாலோ அதை அவதூறு என்று கூறலாம். இதற்கு சட்டத்தில் விளைவுகள் உண்டு. சில சூழ்நிலைகளில் இது ஒரு குற்றமாகும். இணையதளம் மூலம் பரப்பும் எழுத்துக்களுக்கும் கூட இது பொருந்தும். அதனால் மற்றவரை பற்றி எழுதுவதில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
சில குறிப்புகள்:
- கருத்துக்களாக தோற்றம் அளித்த்தாலும், ஒருவர் மீது தவறாகவோ, ஆதாரமில்லாமலோ ஒரு குற்றப்பழியை சுமத்தினால் அது அவதூறுதான்.
- அவதூறை உண்டாக்கவில்லை என்றாலும், அதை பரப்பினாலோ பரப்புவதற்கு உதவியாக இருந்தாலோ, அவ்வாறு பரப்புபவர்கள் சட்டப்படி அந்த அவதூறுக்கு பொருப்பாகிவிடுவர்.
- நாம் பேச கடமைப்பட்டுள்ள போது பேசாமல் இருந்தாலோ; கண்களாலோ, கைகளாலோ, செயல்களாலோ, மற்ற குறிப்புகளாலோ ஒரு விஷயத்தை தெரிவிக்கும்பொழுதும் அவதூறை உண்டாக்க முடியும்.
விதிவிலக்குகள்:
- உண்மை.
- பொது நலம் கருதி நல்லெண்ணத்தில் கூறுவது.
- நல்லெண்ணத்தில் பொது அதிகாரியின் நடவடிக்கைகளை கண்டிப்பது.
- நீதிமன்ற நடவடிக்கைளைப் பற்றி உண்மையான செய்திகளை தெரிவிப்பது.
- நடந்து முடிந்த நீதிமன்ற வழக்கைப்பற்றி அறிவார்ந்த கருத்துக்களை தெரிவிப்பது.
- சட்டப்படி அதிகாரம் உடைய நபரிடம் ஒருவர் மீது நல்லெண்ணத்தில் புகார் கொடுப்பது.
- சட்டப்படி கடமைக்கு உட்பட்டு ஒருவர் மீது நல்லெண்ணத்தில் விசாரணை செய்வது.
சட்டத்தில் ஒரு மனிதனின் நற்பெயருக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சொத்து சேர்ப்பது சுலபம். சமுதாயத்தில் நற்பெயர், மதிப்பு, மரியாதை, கௌரவம் சம்பாதிப்பது மிகவும் கடினம். அதனால் இதைப் பாதுகாக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுள்ளது.
(இந்த கருத்துக்களை ஒரு சட்டம் படிக்கும் மாணவனாக எழுதியிருக்கிறேன். இந்த கட்டுறையில் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்! மேலும் இக்கட்டுறை என் தாழ்மையான கருத்துக்களின் வடிவமே தவிர, அவதூறு சட்டத்தின் அதிகாரமயமான, முழுமையான வடிவமல்ல.)
No comments yet
Leave a comment »There are no comments for this article yet.